Thursday, 22 November 2012

ஒரு பேரரசன் புலம்பல்!!!

நெல்லாடிய நிலமெங்கே?
சொல்லாடிய அவையெங்கே?
வில்லாடிய களமெங்கே?
கல்லாடிய சிலையெங்கே?
தாய் தின்ற மண்ணேதாய் தின்ற மண்ணே
கயல் விளையாடும்
வயல் வெளி தேடி
காய்ந்து கழிந்தன கண்கள்
காவிரி மலரின் கடிமணம் தேடி
கருகி முடிந்தது நாசி
சிலை வடி மேவும்
உளி ஒலி தேடி
திருகி விழுந்தன செவிகள்
ஊன் பொதி சோற்றின்
தேன் சுவை கருதி
ஒட்டி உலர்ந்தது நாவும்....

புலிக் கொடி பொறித்த
சோழ மாந்தர்கள்
எலிக் கறி பொறிப்பதுவோ?
காற்றை குடிக்கும் தாவரமாகி
காலம் கழிப்பதுவோ?
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ?
மன்னன் ஆளுவதோ?
தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே

நொறுங்கும் உடல்கள்
பிதுங்கும் உயிர்கள்
அழுகும் நாடு
அழுகின்ற அரசன்
பழம் தின்னும் கிளியோ?
பிணம் தின்னும் கழுகோ?
தூதோ?
முன் வினை தீதோ?
களங்களும் அதிர
களிறுகள் பிளிற
சோழம் அழைத்து போவாயோ?

தங்கமே என்னை
தாய் மண்ணில் சேர்த்தால்
புரவிகள் போலே புரண்டிருப்போம்
ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்த கண்ணீரை
அருவிகள் போலே அழுதிருப்போம்
அதுவரை..
தமிழர் காணும்
துயரம் கண்டு
தலையை சுற்றும் கோளே.. அழாதே!
என்றோ ஒரு நாள் விடியும்
என்றே இரவை சுமக்கும் நாளே.. அழாதே!
நூற்றாண்டுகளின் துருவை தாங்கி
உறையில் தூங்கும் வாளே.. அழாதே!
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடழும் யாழே..
அழாதே!

நெல்லாடிய நிலமெங்கே?
சொல்லாடிய அவையெங்கே?
வில்லாடிய களமெங்கே?
கல்லாடிய சிலையெங்கே?
தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்.....®@$@