பொன்னியின் செல்வன் வாசிப்பது என்று முடிவு செய்தேன்.ஏதோ பள்ளிக்கூட வரலாற்று புத்தகம் வாசிப்பது போன்ற கசப்பான பாவனையில் படிக்க தொடங்கி ஒரு சில பக்கங்கள் படித்ததுமே விளங்கிவிட்டது எத்தனை வருடத்தை வீணாக்கி விட்டேன் என்பது. என்ன அருமையா நாவல். வேறு வேலை எதுவுமே செய்யதோன்றாதவாறு நாவல் என்னை கட்டிப்போட்டு விட்டது.
நான் ஒரு வழக்கறிஞன் இந்த அற்ப்புதமான வரலாற்றைப் படிக்கத்தொடங்கியது முதல் என் வழக்கு நடவடிக்கைகளில் அதிக கவணம் இல்லாமல் அல்லல்பட்டேன் நீதிமன்றத்திலும்கூட என் அலைபேசியில் pdf மூலமாக படித்துக்கொண்டே இருந்தேன்.
பல நாட்களாகவே கனவில் வந்தியதேவன், அருண்மொழி தேவன், குந்தவை, ஆதித்த கரிகாலன்,அழ்வார்க்கடியான், நந்தினி போன்றவர்கள் தான் வருகிறார்கள்.பொன்னியின் செல்வன் வாசித்த எல்லோருக்கும் இந்த அனுபவம் கிடைத்து இருக்கும் என்பது உண்மை. பலரையும் போலவே நானும் ஆதித்த கரிகாலனை கொன்றது யாராகஇருக்கும் என அறிய சோழ வரலாற்று நூல்கள் எடுத்து படித்து ஆராய்ச்சி செய்கிறேன்.சாண்டில்யன் நாவல்களில் வரும் வர்ணனைகள் பல நேரங்களில் எரிச்சலையே ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் பொன்னியின் செல்வனில் வரும் வர்ணனைக்காகவே மீண்டும் வாசிக்கலாம்.
அந்த காலத்திற்குஎம்மை அழைத்து சென்று எம்மை மகிழ்விக்கிறார் ஆசிரியர். வந்தியதேவனின் குறும்புகள்,ஆபத்திலிருந்து தப்புவதற்கு கையாளும் வழிகள், ஆழ்வார்க்கடியானுக்கும் வந்தியதேவனுக்கும் இடையிலான உரையாடல்கள் போன்றவற்றை ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா? மணிமேகலை பாடுவதாக வரும் "இனியபுனல் அருவி தவழ் இன்பமலைச் சாரலிலே " என்ற பாடல் மிக நன்றாகஉள்ளது.இப்படிசொல்லிக்கொண்டே போகலாம்.பொன்னியின்செல்வனில் எல்லோருக்கும் பிடித்த கதாபாத்திரம் வந்திய தேவன். நாவல் முழுவதையும் அவனே ஆக்கிரமித்துக்கொள்கிறான்.
குந்தவையின் கணவர் என்பதை தவிர வந்தியதேவனைப்பற்றிய தகவல்கள் வேறு இல்லாத போதும் அவனை முதன்மையான பாத்திரமாக கொண்டு 5 பாக (2000 பக்கங்களுக்கு மேல்) நாவலை சுவையாக எழுதியது ஆசிரியரின் திறமை.அவனை அதிவீர சாகசங்களை செய்பவனாக காட்டவில்லை. ஆபத்துநேரங்களில் ஏதோ வகையில் அவனுக்கு உதவிகள் கிடைக்கிறது.அவசர முடிவுகள் எடுத்து பிரச்சினைகளில் போய் மாட்டிக்கொள்ளும் சாதரண மனிதன் போல இருப்பதால் அவனை எல்லோருக்கும் பிடித்து விடுகிறது.ஆனால் அதற்கும் மேல்அன்பும் மதிப்பும் பொன்னியின் செல்வரில் ஏற்படுகிறது.
கதையை வாசித்து முடித்த போது அவரது பெருந்தன்மையும் வீரமும் மனதில் நிறைந்திருப்பது காரணமாக இருக்கலாம்.சோழ அரசை வீழ்த்த பாண்டிய ஆபத்துதவிகள் செய்யும் முயற்சிகள்,பழுவேட்டையர்கள், கொடும்பாளூர் வேளார், முதன்மந்திரி அநிருத்தர் சோழ அரசில் கொண்டிருந்த விசுவாசம், ஒற்றர்களின் திறமை , குந்தவையின் செல்வாக்கும், ஆதித்த கரிகாலனின் வீரம் என்பனஒரளவு விரிவாகவே சொல்லப்பட்டிருக்கின்றன.இந்த நாவலில் கதாபாத்திரங்களுக்கு இடையிலான காதல் சொல்லப்பட்டிருந்தாலும் காதலை முன்னிலைப்படுத்தி நாவல் செல்லவில்லை.காதலையும் அரசியலையும் தேவையான அளவில் கலந்து கொடுக்கப்பட்ட நாவல் என்பதால் தான் பொன்னியின் செல்வன் பெரிய வெற்றி அடைந்திருக்க வேண்டும்.
ஆனால் ஆசிரியர் நாவலை திடீரென முடித்து விட்டது போன்ற உணர்வுதோன்றியது. பல கதாபாத்திரங்கள்என்ன ஆனார்கள் என்பது நாவலில் சொல்லப்படவில்லை. வாசகர் குழம்பும் வகையில் சில சம்பவங்கள் உள்ளன.1. நந்தினி : வீரபாண்டியனின் மனைவியா அல்லது மகளா என்பது குழப்பமாகவே சொல்லப்பட்டுள்ளது.2. சேந்தன் அமுதன் : சேந்தன் அமுதனை உத்தம சோழனாக மாற்றியதுஏற்றுக்கொள்ளும் படி இல்லை. அருண்மொழிதேவனுக்கு முன் உத்தம சோழன் என்பவன் ஆட்சி செய்ததாக வரலாற்றில் உள்ள போது, ஏதோ ஒரு நந்தவனத்தில் வளர்ந்த (அரச குலத்தில் பிறந்திருந்தாலும்), யுத்தம் பற்றிய அறிவு இல்லாத ஒருவர் தான் உத்தம சோழன் என்ற பெயரில் ஆட்சி செய்ததாக ஆசிரியர் எழுதியதன் காரணம் என்னவாக இருக்கும். அதுவும் சேந்தன் அமுதனை உத்தமச்சோழனாக மாற்றுவது ஆசிரியர் எடுத்த திடீர் முடிவு என ஒரு பதிவில் வாசித்த நினைவு உள்ளது.
ஆதித்த கரிகாலன் கொலை கூட குழப்பமாக இருந்தாலும்,உண்மையில் அங்கே என்ன தான் நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதை ஆசிரியர் ஊகத்தின் அடிப்படையில் தான் எழுத முடியும். அவன் கடம்பூரில் மர்மமான முறையில் கொல்லப் பட்டான் என்பதற்கு கல்வெட்டுச் சான்றுகள் இருக்கின்றன.கொலை பற்றிய வலுவான அத்தாட்சிகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. கொலை பற்றி வெவ்வேறு கோணங்களில் எழுதப்படிருப்பதால் வாசகனுக்கு இது பற்றி மேலும் தெரிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது.பொன்னியின் செல்வன் : மிக இனிமையான வாசிப்பு அனுபவத்தை தரக்கூடிய நாவல். ராசாதுரியன் வரலாற்று பிரியர்களாக இருந்தால் அதற்கும் மேலே.வாசிக்க,
http://www.ziddu.com/download/13267439/PonniyinSelvanComplete.pdf.pdf.html
nice
ReplyDelete